திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.67 திருக்கொண்டீச்சரம் - திருநேரிசை
வரைகிலேன் புலன்க ளைந்தும்
    வரைகிலாப் பிறவி மாயப்
புரையிலே அடங்கி நின்று
    புறப்படும் வழியுங் காணேன்
அரையிலே மிளிரு நாகத்
    தண்ணலே அஞ்ச லென்னாய்
திரையுலாம் பழன வேலித்
    திருக்கொண்டீச் சரத்து ளானே.
1
தொண்டனேன் பிறந்து வாளா
    தொல்வினைக் குரியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து
    பேர்வதோர் வழியுங் காணேன்
அண்டனே அண்ட வாணா
    அறிவனே அஞ்ச லென்னாய்
தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த
    திருக்கொண்டீச் சரத்து ளானே.
2
கால்கொடுத் தெலும்பு மூட்டிக்
    கதிர்நரம் பாக்கை யார்த்துத்
தோலுடுத் துதிர மட்டித்
    தொகுமயிர் மேய்ந்த கூரை
ஓலெடுத் துழைஞர் கூடி
    ஒளிப்பதற் கஞ்சு கின்றேன்
சேலுடைப் பழனஞ் சூழ்ந்த
    திருக்கொண்டீச் சரத்து ளானே.
3
கூட்டமாய் ஐவர் வந்து
    கொடுந்தொழிற் குணத்த ராகி
ஆட்டுவார்க் காற்ற கில்லேன்
    ஆடர வசைத்த கோவே
காட்டிடை யரங்க மாக
    ஆடிய கடவு ளேயோ
சேட்டிரும் பழன வேலித்
    திருக்கொண்டீச் சரத்து ளானே.
4
பொக்கமாய் நின்ற பொல்லாப்
    புழுமிடை முடைகொள் ஆக்கை
தொக்குநின் றவைர் தொண்ணூற்
    றறுவருந் துயக்க மெய்த
மிக்குநின் றிவர்கள் செய்யும்
    வேதனைக் கலந்து போனேன்
செக்கரே திகழும் மேனித்
    திருக்கொண்டீச் சரத்து ளானே.
5
ஊனலா முடைகொள் ஆக்கை
    உடைகல மாவ தென்றும்
மானுலா மழைக்க ணார்தம்
    வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
நானெலா மினைய கால
    நண்ணிலேன் எண்ண மில்லேன்
தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த
    திருக்கொண்டீச் சரத்து ளானே.
6
சாணிரு மடங்கு நீண்ட
    சழக்குடைப் பதிக்கு நாதர்
வாணிகர் ஐவர் தொண்ணூற்
    றறுவரும் மயக்கஞ் செய்து
பேணிய பதியின் நின்று
    பெயரும்போ தறிய மாட்டேன்
சேணுயர் மாட நீடு
    திருக்கொண்டீச் சரத்து ளானே.
7
பொய்மறித் தியற்றி வைத்துப்
    புலால்கமழ் பண்டம் பெய்து
பைமறித் தியற்றி யன்ன
    பாங்கிலாக் குரம்பை நின்று
கைமறித் தனைய வாவி
    கழியும்போ தறிய மாட்டேன்
சென்னெறிச் செலவு காணேன்
    திருக்கொண்டீச் சரத்து ளானே.
8
பாலனாய்க் கழிந்த நாளும்
    பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும்
    மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளுங்
    குறிக்கோளி லாது கெட்டேன்
சேலுலாம் பழன வேலித்
    திருக்கொண்டீச் சரத்து ளானே.
9
விரைதரு கருமென் கூந்தல்
    விளங்கிழை வேலொண் கண்ணாள்
வெருவர இலங்கைக் கோமான்
    விலங்கலை எடுத்த ஞான்று
பருவரை யனைய தோளும்
    முடிகளும் பாரி வீழத்
திருவிர லூன்றி னானே
    திருக்கொண்டீச் சரத்து ளானே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com